TA/Prabhupada 0652 – பத்ம புராணம் சத்வ குணத்தில் உள்ளவர்களுக்கானது

Revision as of 07:48, 25 June 2021 by Vanibot (talk | contribs) (Vanibot #0005: NavigationArranger - update old navigation bars (prev/next) to reflect new neighboring items)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


Lecture on BG 6.6-12 -- Los Angeles, February 15, 1969

பக்தர்: பொருளுரை: "உன்னத ஞானத்தை உணராத புத்தக அறிவினால் பயனில்லை. இதுவே பத்ம புராணத்தில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது... "

பிரபுபாதர்: ஆமாம், பத்ம புராணம். பதினெட்டு புராணங்கள் உள்ளன. அவை... மனிதன் மூன்று குணங்களால் நடத்தப்படுகிறான்: ஸத்வ குணம், ரஜோ குணம் மற்றும் தமோ குணம். பல்வேறு விதமான வாழ்க்கையில் கட்டுண்ட ஆத்மாக்களை மீட்பதற்காக புராணங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆறு புராணங்கள் சத்துவ குணத்தில் உள்ளவர்களுக்காக சொல்லப்பட்டது. மேலும் ஆறு புராணங்கள் ரஜோ குணத்தில் உள்ளவர்களுக்காக சொல்லப்பட்டது. மற்ற ஆறு புராணங்கள் தமோ குணத்தில் உள்ளவர்களுக்காக சொல்லப்பட்டது. இந்த பத்ம புராணம் சத்துவ குணத்தில் உள்ளவர்களுக்காக சொல்லப்பட்டது. வேத சம்பிரதாயங்களில் பல்வேறுபட்ட சம்பிரதாய நடைமுறைகளை காணலாம். பல்வேறுவிதமான மனிதர்களுக்காக உள்ளபடியால் அது அப்படி உள்ளது. வேத சாஸ்திரங்களில், காளி தேவிக்காக ஆட்டை பலியாக கொடுக்கும் சடங்கு உள்ளது. இந்தப் புராணம், மார்க்கண்டேய புராணம், தமோ குணத்தில் உள்ளவர்களுக்காக சொல்லப்பட்டது.

மாமிசம் உண்பதில் பற்றுக்கொண்ட மனிதர் போல். இப்போது உடனடியாக மாமிசம் உண்பது நல்லதல்ல என்று அறிவுறுத்தப்பட்டால்... அல்லது குடிப்பழக்கம் உள்ள ஒருவரிடம். குடிப்பழக்கம் நல்லதில்லை என்று சொன்னால் அவரால் ஏற்றுக் கொள்ள முடியாது. எனவே புராணங்களில் நாம் பார்க்கிறோம், "சரி உனக்கு மாமிசம் உண்ண வேண்டுமா, காளி தேவியை வணங்கி கொள், ஆட்டை பலியாகக் கொடுத்து நீயும் உண்டு கொள். மாமிசக் கடைகளிலோ மிருகவதை கூடங்களில் இருந்தோ மாமிசத்தை வாங்கி உண்பது சரியல்ல. நீ இப்படித்தான் உண்ணவேண்டும்" இதற்குப் பெயர்தான் கட்டுப்பாடு. ஏனெனில் காளிதேவிக்கு முன்னால் அந்த பலியை நடத்த வேண்டும் என்றால், அதற்கென்று நாள் நட்சத்திரம் பார்த்து ஏற்பாடு செய்ய வேண்டும். அந்தப் பூஜையும் வழிபாடும் இருட்டான நிலையிலேயே அனுமதிக்கப்படுகிறது. எனவே அமாவாசை என்று பார்த்தால் மாதம் ஒரு முறைதான் வரும். மேலும் மந்திரங்கள் இவ்வாறாக ஜெபிக்க படுகின்றன, "காளிதேவியின் முன்னால் நீ உன் உயிரை தியாகம் செய்கிறாய். எனவே நீ உடனடியாக மனித வாழ்வினை பெறும் உயர்வினை அடைவாய்" உண்மையில் இது நடக்கிறது. ஏனெனில் மனித வாழ்க்கை என்னும் தளத்திற்கு வருவதற்கே, ஒரு உயிர் வாழி பல பரிமாண முறைகளை கடந்து வர வேண்டியிருக்கிறது. ஆனால் அந்த ஆடு, காளி தேவியின் முன்னால் செய்யப்படும் இந்த பலிக்கு ஒத்துக்கொள்ளுமானால், மனித வாழ்க்கை என்னும் உயர்வு உடனடியாக கிடைத்துவிடுகிறது. மேலும் அந்த மந்திரம் சொல்கிறது, "உன்னை பலி கொடுக்கும் இந்த மனிதனைக் கொல்லும் உரிமை உனக்கு உள்ளது" என்று. மாம்ஸ. மாம்ஸ என்றால் அடுத்த பிறவியில் நீ அவனுடைய மாமிசத்தை உண்ணலாம். எனவே இவ்வாறாக, பலி கொடுப்பவன் தன் நிலைக்கு வருகிறான், "நான் ஏன் இந்த மாமிசத்தை உண்ண வேண்டும்? இதற்கு நான் என் மாமிசத்தை விலையாக திருப்பிக் கொடுக்க வேண்டும். இந்த வேலையை நான் ஏன் செய்ய வேண்டும்?" பாருங்கள். மொத்தக் கருத்தே அவனை கட்டுப்படுத்துவது தான்.

எனவே புராணங்கள் பல்வேறு விதமாக உள்ளன, பதினெட்டு புராணங்கள். ஒட்டுமொத்த வேத நூல்களின் நோக்கமும் அனைத்து விதமான மனிதர்களையும் மீட்பதுதான். மாமிசம் உண்பவர்களையும் குடிகாரர்களையும் ஒதுக்குவது அல்ல அதன் நோக்கம். இல்லை. அனைவரும் ஏற்றுக் கொள்ளப்படுகின்றனர். மருத்துவரிடம் செல்வதை போல. அவர் வெவ்வேறு மருந்துகளை வெவ்வேறு நோய்களுக்காக பரிந்துரைப்பார். ஒரே ஒரு நோய் தான் அதற்கு ஒரே ஒரு மருந்து தான் என்பதில்லை. வருபவர்கள் எல்லோருக்கும் அந்த மருந்தை மட்டுமே கொடுக்கிறார் என்பதும் இல்லை. அதுவே உண்மையான சிகிச்சை. மெதுமெதுவே வெற்றி பெறும். ஆனால் சாத்விக புராணங்களில், முழுமுதற் கடவுளை உடனடியாக வணங்குவதற்காக ஏற்பட்டவை. இதன் வழிமுறை படிப்படியானதல்ல. ஆனால் படிப்படியாக, இந்த நிலைக்கு வந்தவன் அறிவுறுத்தப்படுகிறான். எனவே பத்மபுராணம் சத்வ குணத்திற்கான புராணங்களில் ஒன்று. அது என்ன சொல்கிறது? மேலும் படியுங்கள்.