TA/Prabhupada 0011 - ஒருவர் கிருஷ்ணரை மனதினுள்ளும் வழிபடலாம்



Lecture on BG 4.28 -- Bombay, April 17, 1974

பக்தி-ரஸாமருத-சிந்துவில் ஒரு கதை இருக்கிறது... கதையல்ல. உண்மை. அதில் ஒரு பிராமணரைப் பற்றி விவரம் இருக்கிறது - அவர் ஒரு சிறந்த பக்தர் - அவர் கோவிலில் சிறப்பான சேவை, அதாவது அர்ச்சனை செய்ய விரும்பினார். ஆனால் அவரிடம் பணம் இல்லை. ஆனால் ஒரு நாள் அவர் பாகவத உபந்நியாசத்தை உட்கார்ந்து கேட்டிருந்தப் பொழுது கிருஷ்ணரை நம் மனதில் கூட வழிபாடுச் செய்யலாம் என்பதை அறிந்தார். நீண்டகாலமாகவே இதை பற்றி சிந்தனைச் செய்துக் கொண்டிருந்ததால் அவர் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டார். கிருஷ்ணரை எவ்வாறு சிறப்பான முறையில் வழிபடுவது என்ற சிந்தனை இருந்தது, ஆனால் அவரிடம் பணமில்லை. ஆக மனதில் கூட கிருஷ்ணரை வழிபடலாம் என்ற குறிப்பு கிடைத்தவுடன், அவர் கோதாவரி நதியில் குளித்துவிட்டு, ஒரு மரத்தடியில் அமர்ந்திருந்தார் மற்றும் தன் மனதில் ஓர் ஆடம்பரமான சிம்ஹாசனத்தை உருவாக்கினார். அதை பல ரத்தினங்களால் அலங்கரித்து ஸ்ரீ மூர்த்தியை அரியாசனத்தில் வைத்து, கங்கை, யமுனை, கோதாவரீ, நர்மதா, காவேரி ஆகிய நதிகளின் நீரால் நீராட்டினார். அதற்கு பிறகு கடவுளுக்கு அழகான ஆடையை அணிவித்து, மலர்களும், பூமாலையும் சூட்டி வழிபட்டார். அதன்பின் அவர் சுவையாக சமையல் செய்தார், பரமான்னம், இனிப்பான பொங்கல் சமைத்தார். சமைத்த உணவு மிக சூடாக இருக்கிறதா என்று சோதித்துப் பார்க்க விரும்பினார். ஏனெனில் பரமான்னம் நன்கு ஆரியபின் தான் உண்ணப்படும். மிக சூடாக அதை உண்பதில்லை. அவர் தன் விரலை பரமான்னத்தில் வைத்ததும் அவர் விரல் சுட்டுவிட்டது. அதனால் அவருடைய தியானம் கலைந்தது, ஏனென்றால் அங்கு ஒன்றுமே இல்லை. அவர் அத்தனையும்தன் மனதிலேயே செய்துக் கொண்டிருந்தார். ஆனால் தன் விரல் சூடுபட்டிருப்பதைக் கண்டதும் அவர் திகைப்படைந்தார். இப்படியாக, வைகுண்டத்தில் இருந்த நாராயணர் புன்னகை புரிந்தார். லக்ஷ்மி தாயார் கேட்டாள், "தாங்கள் ஏன் புன்னகை புரிகிறீர்கள்?" "என்னுடைய பக்தர் ஒருவர் இவ்வாறு வழிபாடு செய்கிறார். அதனால் என் சேவகர்களை அனுப்பி அவரை உடனடியாக வைகுண்டத்திற்கு அழைத்து வரச்சொல்லுங்கள்." ஆக பக்தி-யோகம் மிகவும் இனியது. அதாவது உங்களால் ஸ்ரீ விக்கிரகத்திற்கு ஆடம்பரமான வழிபாடு செய்ய முடியாவிட்டாலும், நீங்கள் உங்கள் மனதாலையே செய்யலாம். அதுவும் சாத்தியமே.