TA/Prabhupada 0676 – மனதால் கட்டுப்படுத்தப் படுதல் என்பது புலன்களால் கட்டுப்படுத்தப்படுவதாகும்



Lecture on BG 6.25-29 -- Los Angeles, February 18, 1969

விஷ்ணுஜன: ஸ்லோகம் 26: "மனம் தனது சஞ்சலமான நிலையற்ற தன்மையால் எங்கெல்லாம் சஞ்சரிக்கின்றதோ, அங்கிருந்தெல்லாம் மனதை இழுத்து மீண்டும் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர வேண்டும் (பகவத் கீதை 6.26)."

பிரபுபாதா: இதுவே வழிமுறை. இது தான் யோகம். நீங்கள் உங்கள் மனதை கிருஷ்ணரிடத்தில் செலுத்த முயற்சி செய்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம், உங்கள் மனமோ, திரைப்படத்திற்கோ, வேறெங்கோ திசை திரும்புகிறது. எனவே, நீங்கள் உங்கள் மனதிடம் "அங்கில்லை, தயவு செய்து இங்கே வா" என்று திருப்ப வேண்டும். இது தான் யோக முறை. கிருஷ்ணரிடமிருந்து விலகுவதற்கு, மனதை அனுமதிக்க கூடாது. நீங்கள் இதைப் பயிற்சி செய்தால் போதுமானது. உங்கள் மனதை கிருஷ்ணரிடமிருந்து விலகிச் செல்ல அனுமதிக்காதீர்கள். மேலும், ஒரே இடத்தில் அமர்ந்து, கிருஷ்ணரிடம் நமது மனதை நிலைநிறுத்த நம்மால் முடியாததால், இதற்குச் சிறந்த பயிற்சி தேவைப்படுகிறது. ஒரு இடத்தில் அமர்ந்து, எப்போதும் மனதை கிருஷ்ணரிடத்தில் நிலை நிறுத்துவது என்பது, இது மிகச் சுலபமான காரியம் அல்ல. ஒருவன் அதில் பயிற்சி பெறாமல், போலியாகப் பின்பற்றினால், அவன் குழம்பிப் போவான். நாம் நம்மை எப்போதும் கிருஷ்ண உணர்வில் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். நாம் செய்யும் அனைத்து செயல்களிலுமே கிருஷ்ணரை இணைக்க வேண்டும். எல்லாமே கிருஷ்ணருக்கானதாக அமையும் வகையில், நமது அன்றாட செயல்களையும் அமைத்துக் கொள்ள வேண்டும். அதன் பின், உங்கள் மனம் கிருஷ்ணரிடம் நிலைத்திருக்கும். நீங்கள் பக்குவமடையாத நிலையில், செயற்கையாக மனதை கிருஷ்ணரிடத்தில் நிலை நிறுத்த முயற்சி செய்தால், அந்த யோகப் பயிற்சி இங்கே பரிந்துரைக்கப்படுகிறது, ஒரு தனிமையான இடத்தில், நீங்கள் நிமிர்ந்து உட்கார வேண்டும், உங்கள் பார்வையை உங்கள் மூக்கின் நுனியில் பதிக்க வேண்டும், ஒரு தனிமையான புனித இடத்தில்... ஆனால் இதெல்லாம் எப்படி சாத்தியம்? தற்போதைய காலக்கட்டத்தில், இந்த வசதிகளுக்கு ஏது வாய்ப்பு?

எனவே, இது ஒன்றுதான் வழி. உரக்க ஜபம் செய்து, கேளுங்கள். ஹரே கிருஷ்ணா. உங்கள் மனம், வேறேதாவது விஷயத்தில் ஈடுபட்டிருந்தாலும், "கிருஷ்ணா" எனும் ஒலியில் வலுக்கட்டாயமாக ஈடுபடுத்தப்படும். நீங்கள் உங்கள் மனதை மற்ற விஷயங்களிலிருந்து கட்டாயப்படுத்தி விலக்கத் தேவையில்லை, அது இயல்பாகவே விலகிக்கொள்ளும். ஏனெனில், அங்கே சப்தம் உள்ளது. (கார் செல்லும் ஒசை) இதோ கார் செல்லும் ஒசையைப் போல. தானாகவே உங்கள் கவனம் அங்குத் திசை திருப்பப்படுகிறது. அதைப் போலவே, நாம் கிருஷ்ணா என்று கூறும்போது, மனம் அதில் நிலை பெறும். இல்லையென்றால், என் மனம், பல விஷயங்களில் ஈடுபட்டே பழகிவிட்டது. எனவே, யோகப் பயிற்சி என்றால் மனதை மற்ற விஷயங்களிலிருந்து விலக்கி மீண்டும் கிருஷ்ணரிடம் நிலை பெறச் செய்வது தான். எனவே, இந்த மந்திரத்தின் ஒலி அதிர்வுகள், இயல்பாகவே நம்மை யோகப் பயிற்சியில் ஈடுபடுத்தும்.

விஷ்ணுஜன: "பொருளுரை: மனதின் இயல்பு சஞ்சலமானதும் நிலையற்றதுமாகும். ஆனால் தன்னுணர்வு அடைந்த யோகி மனதைக் கட்டுப்படுத்த வேண்டும், மனம் அவரைக் கட்டுப்படுத்தக் கூடாது."

பிரபுபாதா: ஆம், அதுவே யோக முறை. தற்போதைய தருணத்தில், மனம் என்னைக் கட்டுப்படுத்திக் கொண்டிருக்கிறது, கோ-தாஸ. என் மனம் எனக்குக் கட்டளையிடுகிறது, "தயவுசெய்து, அந்த அழகான, இளம் பெண்ணை ஏன் பார்க்கக் கூடாது," உடனே நான் போகிறேன்... "ஏன் மது அருந்தக்கூடாதா?" "சரி." "ஏன் புகைக்கக் கூடாதா?" " சரி." "நல்ல உணவுவிடுதிக்குச் செல்லலாமே?" " ஏன் இதைச் செய்யக் கூடது?" மனம் இடும் பல கட்டளைகளையும் நாம் பின்பற்றி வருகிறோம். எனவே தற்போதைய நிலை என்னவென்றால்... நான் மனதின் கட்டுப்பாட்டில் உள்ளேன். பௌதிக வாழ்க்கை என்றாலே, நாம் மனதின் கட்டுப்பாட்டிலோ, புலன்களின் கட்டுப்பாட்டிலோ உள்ளோம் என்று பொருள். மனம் தான் எல்லா புலன்களுக்கும் மையம். எனவே, மனதால் கட்டுப்படுத்தப்படுகிறோம் என்றால், புலன்களால் கட்டுபடுத்தப்படுகிறோம் என்று பொருள். புலன்கள், மனம் எனும் எஜமானரின் உதவியாளர்களே. எஜமானராகிய மனம் கட்டளையிடுகிறது, "அங்கே போய்ப் பார்", உடனே என் கண்கள் பார்க்கிறது. எனவே, என் கண்கள், கண்களாகிய புலன்கள் மனதால் வழிநடத்தப்படுகின்றன. என் கால்கள் செல்கின்றன. எனவே, கால்களாகிய புலன்கள், மனதால் வழிநடத்தப்படுகின்றன. எனவே மனதின் கட்டுப்பாட்டிற்குள் வருவது என்றால், புலன்களின் கட்டுபாட்டிற்குள் வருவதே ஆகும். ஆகவே, உங்களால் மனதைக் கட்டுப்படுத்த முடிந்தால், நீங்கள் புலன்களின் கட்டுப்பாட்டிற்க்குள் வரமாட்டீர்கள்.