TA/Prabhupada 0668 - குறைந்தபட்சம் மாதத்திற்கு இரண்டு விரதங்கள் தேவை



Lecture on BG 6.16-24 -- Los Angeles, February 17, 1969

ஆக இங்குப் பரிந்துரை என்னவென்றால், இந்த உடல் பயனற்றது தான், ஆனால் அதற்காக இதனைப் பராமரிக்க வேண்டாம் என்று அர்த்தமல்ல. நீங்கள் உங்கள் காரில் ஓர் இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். நீங்கள் அந்தக் கார் அல்ல, ஆனால் அந்தக் காரை நீங்கள் உபயோகப்படுத்த வேண்டும் என்பதற்காக அதனைப் பராமரிக்க வேண்டும். அதுபோலத் தான். ஆனால் அதற்காகக் காரிலேயே மிகுந்த ஈடுபாடு கொண்டு வேறு வேலையே இல்லாமல் இருப்பதல்ல. காரில் மிகுந்த ஈடுபாடு கொண்டுள்ள ஒருவர் தினம்தினம் அதனைத் துடைத்துத் துடைத்து மெருகேற்றுவது போல. நாம் இந்த உடலோடு அதிகமான ஈடுபாடு கொள்ளுதல் கூடாது. ஆனால் இந்த உடலைக் கொண்டு தான் பக்தித் தொண்டாற்ற வேண்டும் ஆதலால் இதனை நல்ல நிலையில் வைத்துக் கொள்ளவும் வேண்டும். இதற்குப் பெயர்தான் யுக்த வைராக்கியம். இதனை நாம் அலட்சியம் செய்தல் கூடாது. நாம் அன்றாடம் குளிக்க வேண்டும், நல்ல உணவு உண்ண வேண்டும், கிருஷ்ண பிரசாதம், மனதையும் உடலையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும். அது அவசியம்.

ஆகக் கிருஷ்ண பக்தி இயக்கம் செயற்கையாக உன்னைத் துறவரம் ஏற்றுக்கொள்ள சொல்வதில்லை. அது முட்டாள்தனம். அதனைச் சரி கட்டுவதற்கு போதைப்பொருட்களை உட்கொள்வது வழியல்ல. நல்ல உணவை உண்ண வேண்டும். கிருஷ்ணர் நல்ல உணவைக் கொடுத்து இருக்கிறார். பழங்கள், தானியங்கள், பால் - இவை கொண்டு ஆயிரக்கணக்கான பதார்த்தங்களைச் சமைக்க முடியும். இந்தத் தானியங்களைக் கொண்டு நாங்கள் செய்கிறோம். உங்களை அன்பு விருந்திற்கு அழைப்பதன் நோக்கம் இதுதான்: கிருஷ்ண பிரசாதம் கொண்டு உங்கள் அனைத்து முட்டாள்தனமான உணவுகளையும் மாற்றுங்கள். அவை உடலுக்கு நல்லதல்ல. இவை ஆரோக்கியமான உணவு. சுவையான, ஆரோக்கியமான உணவு. எனவே கிருஷ்ண பிரசாதத்தை உண்ணுங்கள். உங்கள் நாவுக்கு நல்ல ருசியான உணவு வேண்டுமென்றால் எங்களால் நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கான பிரசாதத்தை தர முடியும். சமோசா மற்றும் இந்த இனிப்புப் பந்து, ரசகுல்லா, இதுபோலப் பலவற்றை நாங்கள் கொடுக்க முடியும். பாருங்கள்? உங்களுக்குத் தடை இல்லை. ஆனால் அதிகமாக உண்ணாதீர்கள். "அட, இது மிக ருசியாக இருக்கிறது, நான் ஒரு டசன் ரசகுல்லா எடுத்துக் கொள்கிறேன்." இல்லை, அப்படி செய்யாதீர்கள். (சிரிக்கிறார்) அது நல்லதல்ல. அது பேராசை. உங்கள் உடம்பை வளமாக வைத்துக் கொள்ள எது வேண்டுமோ அவ்வளவு தான் எடுத்துக் கொள்ள வேண்டும். உங்கள் உடலைச் சரிவர வைத்துக் கொள்ளும் அளவிற்கு தான் உறங்க வேண்டும். அதிகம் அல்ல. இதற்குப் பெயர்தான் யுக்த. யுக்தாஹார விஹாரஸ்ய யோகோ பவதி ஸித்தி (BG 6.17). உடலை ஆரோக்கியமான நிலையில் வைத்துக் கொள்வதற்குத் தான் உண்ணவும் உறங்கவும் வேண்டும். அதையே குறைக்க முடிந்தாலும் நல்லதுதான். ஆனால் உடல் சீர்கேடு வரும் அபாயம் இருந்தால் கூடாது.

ஏனெனில் முன்பு நாம் அதிகமாக உண்டு பழக்கப்பட்டு இருப்போம். எனவே செயற்கையாகக் குறைவாக சாப்பிட முயற்சிக்காதீர்கள். உண்ணுங்கள் ஆனால் அதைக் குறைக்க முயற்சி செய்யுங்கள். அதிகமாகி விட்டால்... அதனால் தான் விரதம் என்ற முறை பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மாதத்திற்கு இரு முறையாவது கட்டாய விரதம். மேலும் இதர விரத நாட்களும் உள்ளன. உணவையும் உறக்கத்தையும் குறைக்க குறைக்க ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும் முக்கியமாக ஆன்மீக வளர்ச்சிக்கு. ஆனால் அது செயற்கையாக இருக்கக் கூடாது. ஆனால் நீங்கள் முன்னேறும்போது, ​​இயற்கையாகவே நீங்கள் உணர மாட்டீர்கள் ... ரகுநாத தாச கோஸ்வாமி போல. பல உதாரணங்கள் உள்ளன. ரகுநாத தாச கோஸ்வாமி ஒரு பெரும் செல்வந்தரின் மகன். அவர் தனது வீட்டை விட்டுப் பகவான் சைதன்யருடன் வந்து விட்டார். எனவே அவரது தந்தை - அவர் ஒரே மகன், மிகவும் பிரியமான மகன். மிகவும் நல்ல மனைவி. எல்லாவற்றையும் விட்டுவிட்டார். விட்டுச் செல்வது என்றால் திருட்டுத்தனமாக யாரிடமும் சொல்லாமல் எப்படியோ வீட்டைவிட்டு வெளியேறிவிட்டார். அவர் பூரியில் உள்ள சைதன்ய மகாபிரபுவிடம் சென்றுவிட்டார் என்பதை தந்தையால் புரிந்து கொள்ள முடிந்தது. எனவே அவர் செல்வந்தரான படியால், அவர் நான்கு பணியாளர்களை அனுப்பினார். மேலும் 400 ரூபாய் - 500 ஆண்டுகளுக்கு முன்பு இந்த 400 ரூபாய் இன்றைய மதிப்பைவிட 20 மடங்கு அதிக மதிப்பு கொண்டது. அதனை அவர் முதலில் ஏற்றுக் கொண்டார், "ஓ, தந்தை அனுப்பியிருக்கிறாரே!" அவர் அந்தப் பணத்தை எப்படி செலவழித்தார்? அனைத்து சன்யாசிகளையும் அழைத்தார் - முற்றும் துறந்த சந்நியாசிகள் ஜெகன்னாத் பூரியில் பலர் இருந்தனர். ஒவ்வொரு மாதமும் அவர் விருந்து அளித்தார் சில நாட்கள் கழித்து, பகவான் சைதன்யர் தனது காரியதரிசியான ஸ்வரூப தாமோதரவிடம், "என்ன இப்பொழுது சில நாட்களாக ரகுநாதரிடமிருந்து எனக்கு அழைப்பு வருவதில்லையே என்னவாயிற்று?" என்று கேட்டார். "ஓ ஐயா அவர் தனது தந்தையின் பணத்தை ஏற்பதை நிறுத்திவிட்டார்." "ஓ, அது மிகவும் நல்லது." "நான் அனைத்தையும் துறந்து விட்டேன் இந்நிலையில் என் தந்தையின் பணத்தை நான் அனுபவித்து வருகிறேன். இது எல்லாம் முட்டாள்தனம்" என்று அவர் நினைத்தார். அவர் மறுத்துவிட்டார். அவர் அந்த மனிதரிடம், "நீங்கள் வீட்டிற்குச் செல்லுங்கள். எனக்குப் பணம் தேவையில்லை" என்று கூறினார். பின்னர் அவர் எப்படி வாழ்கிறார்? "அவர் ஜகன்னத் பூரி கோவில் படிக்கட்டில் நின்று கொண்டிருக்கிறார், புரோகிதர்கள் வீட்டிற்குச் செல்லும்போது சிறிது பிரசாதம் கொடுக்கின்றனர், அதை வைத்துத் திருப்தி அடைந்து கொள்கிறார்." சைதன்ய மஹாபிரபு கூறினார், "நல்லது மிகவும் நல்லது." சைதன்ய மஹாபிரபு அவர் அங்கு எப்படி நிற்கிறார் என்று கேட்டார். பின்பு அதனைச் சென்று பார்த்தார். சில நாட்களுக்குப் பின் ரகுநாத தாச கோஸ்வாமி அங்கு நிற்பதையும் நிறுத்திவிட்டார். அப்போது சைதன்ய மகாபிரபு தன் காரியதரிசியிடம் கேட்டார், "ரகுநாதர் அங்கு நிற்பதில்லையே அவன் என்ன செய்கிறான்?" "இல்லை ஐயா அவர் அங்கு நிற்பதையும் நிறுத்திவிட்டார், ஏனெனில் அவர் நினைத்தார், 'யாராவது வந்து எனக்கு ஏதாவது தருவார்கள் என்று ஒரு தாசியை போன்று நான் நின்று கொண்டிருக்கிறேன் இல்லை இல்லை இது எனக்குப் பிடிக்கவில்லை.'" "ஓ, பரவாயில்லையே. பின்பு எப்படி சாப்பிடுகிறார்?" "அவர் சமையலறையில் சில நிராகரிக்கப்பட்ட அரிசியை சேகரித்து வருகிறார், அதைச் சாப்பிடுகிறார். "

ரகுநாத தாச கோஸ்வாமியை ஊக்குவிப்பதற்காகச் சைதன்ய மஹாபிரபு அவருடைய இருப்பிடத்திற்கு ஒருநாள் சென்றார். "ரகுநாதா? நீ மிகவும் நல்ல உணவுப்பொருட்களைச் சாப்பிடுகிராய் என்று கேள்விப்பட்டேன், நீ என்னை அழைக்கவில்லையா?" அவர் பதிலளிக்கவில்லை. எனவே அவர் அந்த உணவை எங்கே வைத்திருக்கிறார் என்பதைக் கண்டுபிடித்தார், அதனை உடனடியாக எடுத்துச் சாப்பிட ஆரம்பித்தார். "ஐயா அதனை உண்ணாதீர்கள் அது உங்களுக்கு உகந்ததல்ல." "ஓ! அது ஜெகன்நாதர் பிரசாதம், அது எனக்கு உகந்ததல்ல என்று நீ எப்படி கூறலாம்?" "நிராகரிக்கப்பட்ட இதை நான் சாப்பிடுகிறேன்" என்று அவர் நினைக்காமல் இருப்பதற்காக அவரை ஊக்குவித்தார். இப்படித்தான் ரகுநாத கோஸ்வாமி தனது உணவைக் குறைத்துக் கொண்டார். இறுதியாக இரண்டு நாளைக்கு ஒருமுறை சிறிதளவு வெண்ணையை உண்பார். அவர் நூற்றுக்கணக்கான முறை கீழே விழுந்து வணங்கினார், மேலும் பலமுறை ஜெபம் செய்துகொண்டிருந்தார். ஸங்க்யா பூர்வக நாமா - சத் கோஸ்வாமிகளின் பாடலைப் பாடும்போது இதனைக் கேட்டிருப்பீர்கள். ஸங்க்யா-பூர்வக-நாம-கான-நதிபி: காலாவஸானீ-க்ருதௌ. இப்படி குறைத்துக் கொள்வதற்கு பல உதாரணங்கள் இருக்கின்றன. நமது எல்லா பெளதிகத் தேவைகளையும் குறைத்துக் கொள்ளுதல். ஒன்றுமே இல்லாத நிலைவரை. பாருங்கள், ஆனால் அது அனைவருக்கும் சாத்தியமில்லை. ரகுநாத தாஸ் கோசுவாமியை நகல் செய்ய முயற்சிக்க வேண்டாம். ஏனெனில் அவர்கள் பகவான் சைதன்யரின் சகாக்கள். ஒவ்வொருவரும் ஒரு உதாரணத்தைக் காட்டினார்கள். கிருஷ்ண பக்தியில் எப்படி முன்னேறுவது என்பதற்கு தனித்துவமான உதாரணங்கள். ஆனால் நமது வேலை அதனை நகல் செய்வதில்லை. ஆனால் அதனைப் பின்பற்ற முயற்சி செய்வது. முடிந்தவரை அதனைப் பின்பற்ற முயற்சி செய்யுங்கள். செயற்கையாக வேண்டாம்.

எனவே தான் இங்கு, "ஒருவர் யோகி ஆவதற்கு எந்தச் சாத்தியக்கூறும் இல்லை" என்று கூறப்படுகிறது..." உடனடியாக ரகுநாத தாச கோஸ்வாமி போல் இருக்க முயற்சித்தால் நீங்கள் தோல்விதான் அடைவீர்கள். நீங்கள் அடைந்த முன்னேற்றம் கூட முடிவடைந்துவிடும். வேண்டாம். அப்படியல்ல. சாப்பிடுங்கள். ஆனால் அதிகமாகச் சாப்பிட வேண்டாம். அவ்வளவு தான். அதிகமாக உண்ணுதல் நல்லது அல்ல. நீங்கள் சாப்பிடுங்கள். நீங்கள் யானையாக இருந்தால் நூறு பவுண்டுகள் சாப்பிடுவீர்கள், ஆனால் நீங்கள் எறும்பாக இருந்தால் ஒரு தானியத்தைச் சாப்பிடுவீர்கள். யானையைப் பின்பற்றி நூறு பவுண்டுகள் சாப்பிட வேண்டாம். கடவுள் யானைக்கும் உணவு கொடுக்கிறார். எறும்புக்கும் உணவு கொடுக்கிறார். ஆனால் நீங்கள் உண்மையாகவே யானையாக இருந்தால், யானைபோல உண்ணுங்கள். ஆனால் எறும்பாக இருந்துகொண்டு யானைபோல உண்ணாதீர்கள். சிரமத்திற்கு உள்ளாவீர்கள். அதனால்தான் இங்குச் சொல்லப்படுகிறது, "யோகி ஆவதற்கு எந்தச் சாத்தியக்கூறும் இல்லை, ஓ அர்ஜுனா, மிக அதிகமாகவோ மிகக் குறைவாக உண்டால்." நல்ல வழிமுறை. மிகக் குறைவாக உண்ண வேண்டாம். உங்களுக்குத் தேவையானவற்றை உண்ணுங்கள். ஆனால் அதிகமாகவும் உண்ண வேண்டாம். அதுபோலத் தான் அதிகமாக உறங்காதீர்கள்.

உங்கள் ஆரோக்கியத்தை சரியாக வைத்திருங்கள், ஆனால் குறைக்க முயற்சிக்கவும். நீங்கள் பத்து மணி நேரம் தூங்குகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். ஆனால் ஐந்து மணிநேரம் தூங்குவதன் மூலம் நான் ஆரோக்கியமாக இருக்கிறேன் என்றால், நான் ஏன் பத்து மணி நேரம் தூங்க வேண்டும்? இதுவே வழிமுறை. செயற்கையாக எதையும் செய்ய வேண்டாம். உடலைப் பொருத்த வரை நமக்கு 4 தேவைகள் உள்ளன. உணவு, உறக்கம், இனப்பெருக்கம், தற்காப்பு. நவீன நாகரிகத்தின் குறைபாடு என்னவென்றால், இந்த உணவையும் உறக்கத்தையும் பெருக்குதல் சிறப்பு என்று எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். சனி ஞாயிறுகளில் முழுநாளும் உறங்குவது பெரும் கொண்டாட்டமாக எண்ணுகிறார்கள். அதுவே நாகரிகம். அது வாழ்க்கையை அனுபவிக்க ஒரு வாய்ப்பாக எண்ணுகிறார்கள், ஒரு நாளைக்கு 30 மணி நேரம் உறங்குவது. அப்படிச் செய்யாதீர்கள் அதனைக் குறையுங்கள். குறைத்துக் கொள்ள முயற்சியுங்கள். ஆனால் செயற்கையாக அல்ல. மேலும் படியுங்கள்.