TA/Prabhupada 0669 – மனதை நிலைநிறுத்துதல் என்றால் நமது மனதை கிருஷ்ணரிடம் செலுத்துதலாகும்



Lecture on BG 6.16-24 -- Los Angeles, February 17, 1969

பக்தர்: ஸ்லோகம் 17: "உண்ணுதல் உறங்குதல் உழைத்தல் கேளிக்கை ஆகிய பழக்கங்களை நெறிப்படுத்தியவன், யோகப் பயிற்சியின் மூலமாக எல்லா துன்பங்களையும் பெருமளவில் நீக்கிவிட முடியும்.(பகவத் கீதை 6.17)."

பிரபுபாதர்: ஆமாம். பெயரளவிலான யோக வகுப்பிற்கு செல்ல வேண்டும் என்ற கேள்விக்கே இடமில்லை. அங்குச் சென்று ஐந்து ரூபாய் அல்லது ஐந்து டாலர்கள் செலவழித்து உடல் கொழுப்பைக் குறைத்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டியதில்லை. நீங்கள் வெறுமனே பயிற்சி செய்யுங்கள். இந்தப் பயிற்சி: உங்களுக்குத் தேவையான அளவு சாப்பிடுங்கள் தேவையான அளவு உறங்குங்கள். உங்கள் ஆரோக்கியம் அருமையாக இருக்கும். வெளி உதவி எதுவும் தேவை இருக்காது. இதைப் பயிற்சி செய்தாலே அனைத்தும் சரியாக இருக்கும். மேலே படியுங்கள்.

பக்தர்: ஸ்லோகம் 18: "யோகியானவன் யோக பயிற்சியின் மூலமாகத் தனது மனதின் செயல்களை ஒழுங்கு படுத்தி எல்லா ஜட ஆசைகளிலிருந்தும் விடுபட்டு, உன்னதத்தில் நிலை பெறும்போது, யோகத்தில் நன்கு நிலை பெற்றவனாகக் கூறப்படுகிறான் (பகவத் கீதை 6.18)."

பிரபுபாதர்: ஆமாம் மனதை சமநிலையில் வைக்க அதுவே சிறந்த யோகப் பயிற்சி. மனதை வைப்பதற்கு... அதனை எப்படி செய்வது? பௌதீக தளத்தில் மனதை சமநிலையில் வைப்பது முடியாது. சாத்தியமில்லை. இந்தப் பகவத் கீதையை எடுத்துக்கொள்வோம். இதனைத் தினமும் நான்கு முறை படித்தாலும் உங்களுக்குச் சலிக்காது. அதுவே வேறொரு புத்தகத்தை எடுத்து ஒரு மணி நேரம் படியுங்கள், உங்களுக்குச் சலித்து விடும். இந்த ஹரே கிருஷ்ணா ஜெபம், நாள் முழுவதும் ஜபம் செய்து கொண்டு ஆடிப் பாடுங்கள், களைப்படையவே மாட்டீர்கள். அதுவே வேறு பெயரை எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு மணி நேரத்திற்கு பிறகு சலித்து விடும். அது தொந்தரவாகிவிடும். எனவே மனதை ஒருநிலைப் படுத்துவது என்பது கிருஷ்ணர் மேல் வைப்பது, அதுவே எல்லாவிதமான யோகமும் ஆகும். நீங்களே சிறந்த யோகி. நீங்கள் செய்ய வேண்டியது வேறொன்றுமில்லை. மனதை ஒருநிலை படுத்துங்கள். ஸ வை மன: க்ருஷ்ண-பதாரவிந்தயோர் வசாம்ஸி வைகுண்ட (ஸ்ரீமத் பாகவதம் 9.4.18) - பேசினால் கிருஷ்ணரைப் பற்றிப் பேசுங்கள். சாப்பிட்டால் கிருஷ்ண பிரசாதத்தை சாப்பிடுங்கள். நினைத்தால் கிருஷ்ணரைப் பற்றி நினையுங்கள். செயல் செய்தால் கிருஷ்ணருக்கான செயலைச் செய்யுங்கள். எனவே இந்த வழியில், இந்த யோக பயிற்சியானது சரியானதாக இருக்கும். வேறு வழி இல்லை. அதுவே யோகத்தின் உன்னத நிலையாகும். பௌதிக ஆசைகள் இல்லாத நிலை. நீங்கள் கிருஷ்ணரை மட்டுமே விரும்புகிறீர்கள் என்றால் பௌதீக விருப்பங்களுக்கு அங்கு இடமேது? எல்லா பௌதிக விருப்பங்களும் முடிந்துவிடும். அதற்காக நீங்கள் செயற்கையாக முயற்சி செய்ய வேண்டியதில்லை. "நான் எந்த அழகிய பெண்ணையும் பார்க்கக் கூடாது. என் கண்களை மூடிக் கொள்கிறேன்" என்று நீங்கள் செய்ய முடியாது. ஆனால் கிருஷ்ண உணர்வில் உங்கள் மனதை நிலை நிறுத்தி விட்டால் நீங்கள் பல்வேறு அழகிய பெண்களுடன் நடனம் ஆடுகிறீர்கள். அதனால் தவறில்லை. சகோதர சகோதரிகளாக இருப்பதில் கேள்வியில்லை. இது நடைமுறை - யோகத்தின் உன்னத நிலை. செயற்கையாக உங்களால் செய்ய முடியாது.

கிருஷ்ண உணர்வில் அனைத்து பூரணத்துவமும் உள்ளது. இதனைப் புரிந்து கொள்ள முயற்சியுங்கள். அனைத்து பூர்ணத்துவம். ஏனெனில் அது ஆன்மிக தளத்தில் உள்ளது. ஆன்மீகத் தளம் நித்தியமானது, ஆனந்த மயமானது, அறிவு நிறைந்தது. எனவே அதில் எந்தக் குற்றமும் இல்லை. மேலே தொடரலாம்.